×

வக்கீல் வீட்டில் குண்டு பாய்ந்த சம்பவம் மேலும் 6 ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

தாம்பரம், பிப்.8: தாம்பரத்தில் வக்கீல் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரத்தில், மேலும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியின் 6 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, மீனாம்பாள் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவரது வீட்டில் பிரியாவின் மகன் விஷால் மற்றும் பிரியா தாய் பத்மா, கணவர் வக்கீல் தியாகராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பிரியா, விஷால் மற்றும் பிரியாவின் தாய் பத்மா ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தபோது வீட்டின் உள்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென நொறுங்கி விழுந்தது. இதனால், அவர்கள் கண்ணாடி நொறுங்கி விழுந்த இடத்தில் பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, அங்கிருந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி, துப்பாக்கி குண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்து விழுந்திருக்கலாம் எனவும், யாராவது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டார்களா என்பது குறித்து தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டின் அருகே காந்தி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், துப்பாக்கி குண்டு ஒன்று இருப்பதாக நேற்று தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த ஒரு குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, மேலும் 5 துப்பாக்கி குண்டுகள் என மொத்தம் 6 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது, பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கி வகையை சேர்ந்த குண்டுகளாக இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் துப்பாக்கி குண்டுகள் தாம்பரம் மேம்பாலத்தை ஒட்டியுள்ள பாதுகாப்பு துறை குடியிருப்பு வளாகத்தில் இருந்து வந்ததா என போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதேபோல கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் நேற்று மாலை துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து துப்பாக்கி குண்டுகள் வந்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளை கிழக்கு தாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி மைய அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்து, அவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய துப்பாக்கிகளில் இருந்து வெளியான குண்டுகளா என விசாரிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வக்கீல் வீட்டில் குண்டு பாய்ந்த சம்பவம் மேலும் 6 ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,A.K. ,Priya ,Meenampal Street, West Tambaram ,Mantopu ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...